அரியானா: பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மித் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதித்து பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அரியானாவில் தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங். இவர் மீது கடந்த 1999ம் ஆண்டு தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் குர்மீத்திற்கு 20 ஆண்டு சிறை தண்டணை வழங்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவர் மீது 2 கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2002-ம் ஆண்டு குர்மீத் குறித்த உண்மைகளை வெளியிட்டதாக கூறி பூரா சச் என்ற பத்திரிக்கையின் உரிமையாளர் ராம்சந்தர் சத்ரபதி குர்மீத்தின் ஆட்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றும் அதற்கு உதவி செய்த குற்றத்திற்காக தேரா அமைப்பின் முன்னாள் மேலாளர் ரஞ்ஜித் சிங் கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து கொலை செய்யப்பட்ட இருவரின் குடும்பத்தார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக குர்மீத் ராம் ரஹீம், குல்தீப், நிர்மல், கிரிசன்லால் ஆகியோர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு 2003-ம் ஆண்டு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. சி.பி.ஐ. 2007-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி இந்த வழக்கு குறித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த கொலை வழக்கிற்கான இறுதிக்கட்ட விசாரணை கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
குர்மித் சிங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அவரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மித் ராம் ரஹீம் குற்றவாளி என்று பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மித் ராம் ரஹீம் உட்பட 4 பேர் குற்றவாளிகள் என்றும் நீதிபதி தெரிவித்தார். பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 4 பேருக்கும் ஆயுள் தண்டனையுடன், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி